இரண்டு நாட்களாக ஏதும் எழுதவில்லை. நான் எழுதாவிட்டால், யாரும் தீக்குளித்துவிடுவார்களோ என்ற பேரச்சத்தின் (நப்பாசையின்) காரணமாக, ‘இன்று எழுதமுடியவில்லை... மன்னிக்க...’ என்று அறிவிப்புவேறு வெளியிட்டேன். சரி... விஷயத்திற்கு வருவோம்.
’பார்க்கலாம்.... வேட்டை. ஒரு வாரம் கழிச்சு சென்னைக்கு வர்றேன் அப்பப் பார்க்கலாம்’ என்று ராமச்சந்திரன் அலட்சியமாகச் சொன்னான். ‘நெஞ்சு நிறைய ஆசையை வச்சுக்கிட்டுத், திருட்டுப்பய நடிக்கிறான்‘ என்று தான் நினைத்துக்கொண்டேன். வந்த ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, ’டேய்.... நாளைக்கே கிளம்பி வாடான்னா வா... நாம இப்படி நிறைய வாய்ப்புகளை மிஸ் பண்ணியிருக்கோம். இந்தத் தடவ விடக்கூடாது தயவுசெஞ்சு வந்து சேரு’ என்றேன்.... ’சரிடா....சரிடா... நான் சாயங்காலம் உன்னைக் கூப்பிடுறேன்....ஓகே.. கூல் மச்சி....கூல் கூல்’ என்றான். ஃபோனை வைத்த பிறகு எனக்கு நிம்மதியாக இல்லை. ஏதோ அவன் பேச்சில் நெருடியது. இது வழக்கமாக ராமச்சந்திரனின் பேச்சல்ல.
அவன் ஒரு விஷயத்தில் உற்சாகமாகிவிட்டால் காதிலிருந்து ரத்தம் வரும்வரை பேசிக்கொண்டேயிருப்பான். செல்ஃபோனைப் பிடிக்கும் கை கடுக்கும். காதுமடல் சூடேறி த் தீயாக எரியும். ஆனாலும் விட மாட்டான். ஒருமுறை...அவன் மணிக்கணக்காக செல்ஃபோனில் பாடிக்கொண்டிருந்ததோது, எனக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்துவிட்டது. என் அவஸ்த்தையை உணராத அவனோ, வனஸ்பதி ராகத்தில்(சத்தியமா அப்படியொரு ராகம் உண்டுங்க) என்னைத் வறுத்தெடுத்துக்கொண்டிருந்தான். ’’டேய் செத்த இருடா பாத்ரூம் போயிட்டு வந்துடுறேன்’ என்று சொன்னேன். ’கொஞ்சம் மூடிக்கிட்டு கேளுடா‘ என்றவன், தொடர்ந்து பாட ஆரம்பித்துவிட்டான். நான் ‘அந்த’ இடத்தில் கைவைத்துப் பொத்திக்கொண்டு கட்டிலில் உட்காருவதும், நிற்பதுமாக, டான்ஸ் ஆடியபடி நெளிந்து கொண்டிருந்தேன். இதை வினோதமாகப் பார்த்த அறை நண்பர் கூத்தலிங்கம், ‘என்ன வேட்டை நீர்க்கடுப்பா?’ என்று சிரிப்பை அடக்கமாட்டாமல் கேட்டார். அவரிடம் சைகையிலே ஒன்றை விரலைக் காண்பிக்க, அவர் நிலைமையைப் புரிந்துகொண்டார். ’யாரு.... ராமச்சந்திரனா....? அப்ப பேண்டோட பேஞ்சுடுங்க.... பாண்டிய விட்டு ரூமைக் கழுவிக்கலாம்’ என்றார் சிரித்துக்கொண்டே. எங்கள் அறையில் பாத்ரூம் இல்லை. மொட்டை மாடிக்கு ஓடவேண்டும். ஆனால், ராமச்சந்திரனின் கச்சேரி களைகட்டியிருந்தது. இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் ஆபத்துதான். கூத்தலிங்கம், விஷயத்தைக் கூத்தாடிச் சொல்லிவிடுவார். திடுதிடுவென ஓட்டமெடுத்தேன். இரண்டு மாடி ஏறவேண்டும். நான் புயல்வேகத்தில் பாத்ரூமிற்குள் நுழைந்த போது பாட்டு உச்சகட்டத்தை எட்டியிருந்தது. ஜிப்பைத் திறந்து எடுத்துவிட்டேன் பாருங்கள்... மட மடன்னு காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்துகொண்டிருந்தது...இசைவெள்ளம். ஆஹா-
திடீரென்று பாட்டை நிறுத்திவிட்டு, ’அங்கே என்னடா , சட சடன்னு சத்தம்? என்று கேட்டான். ‘ஒண்ணுக்குப் போறேன்டா‘ என்றேன். அப்புறமென்ன? வழக்கம் போல் புனா சுனான்னு பொளந்துகட்டிவிட்டான். (அவனுடைய இசையைப் பற்றி பொருந்தாத இடத்தில், படுமோசமான விதத்தில் அறிமுகம் செய்ததற்கு மன்னிக்கவேண்டும். எங்களுக்குள் இசையைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவனுடைய இசை என் உயிரைத் தீண்டிய அபாரமான தருணங்களைப் பற்றி பின்னர் எழுதுகிறேன்) இப்படி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பேசிக்கொண்டே இருப்பவன், சினிமாவில் வாய்ப்புகிடைத்துள்ளது என்ற செய்தியைச் சொன்ன பிறகும் இரண்டொரு வார்த்தையில் பேச்சை முடித்துவிட்டது வினோதமாகவே இருந்தது. அதுதான் ராமச்சந்திரன். அவன் சொன்னபடி அன்று மாலை ஃபோன் பண்ணவில்லை. இரவு பத்துமணிக்கு அவன் வீட்டு நம்பருக்குப் ஃபோன் பண்ணினேன். எடுத்தது அவனுடைய மனைவி. ‘வெளியே போயிருக்கிறாரே...வந்ததும் சொல்றேன்’ என்று பதில் வந்தது. மறுநாள், அதற்கு மறுநாள்... அதற்கும் மறுநாள்? ம்ஹும். அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இரண்டு நாளில் அழைத்துவருவதாக இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேனே? அவனிடம் செல்ஃபோனிருந்தால் அழைத்துப் பேசியிருப்பேன். வீட்டு நம்பருக்குப் போன் பண்ண எனக்கு விருப்பமில்லை. அவன் சொன்ன ஒருவாரம் போயே போய்விட்டது.
இதற்கிடையில் வேறுவேலையாக இயக்குநரைச் சந்திக்கவேண்டியிருந்தது. அப்போது அவர் மறக்காமல் கேட்டார். ‘எங்கே உங்க ஃப்ரண்டு? கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க?‘
‘அவன் வீட்டுல கொஞ்சம் பிரச்னை..இன்னிக்கு இல்ல நாளைக்கு வந்துடுவான்’ என்றேன். ‘பரவாயில்ல... வரட்டும் வரட்டும்..’ என்றார் பொறுமையாக. எனக்குச் சங்கடமாகிவிட்டது. ஆனாலும் வாய்ப்பு இன்னும் இருக்கிறதே என்று மனது அடித்துக்கொண்டது. உடனே சுயகவுரவத்தை உதறிவிட்டு, ராமச்சந்திரன் வீட்டுக்குப் போன் போட்டேன். மணி அடித்துக்கொண்டேயிருந்தது. எடுப்பார் யாருமில்லை. அப்போதுதான் அவன் சென்னைக்குக் குடும்பத்தோடு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வந்தது. இனி நான் அவனை எப்படித் தொடர்பு கொள்வேன்?
6 comments:
அந்தக் குரங்கு கூட (அதாங்க அனுமன்) இந்தளவுக்கு ராமன் புகழ் பாடியிருக்காது. அழிந்து கொண்டிருக்கும் இசையுலகைக் காப்பாற்ற இந்த ராமன் வந்தே தீர வேண்டுமாம். பாவம், அந்த இயக்குநர் கூடிய விரையில் உங்கள் இருவரைப் பற்றியும் புரிந்து கொண்டு (யாருக்குத் தெரியும் அவரும் உங்களைப் போல் இருந்தால்...)ஓடி ஒளியப் போகிறார். ஒருவேளை அவர் பாடகராகிவிட்டால் அவரது பி.ஆர்.ஓ.வாக மாறிவிடத் திட்டம் ஏதாவது உங்களிடம் இருக்குமோ? அவன் பிளாக் எழுதுகிறான் என்பதற்காக பிளாக் எழுதுபவனை எல்லாம் திட்டித் தீர்த்த ஒருவர், இப்போது அவனைப் புகழ்ந்து இப்படி பிளாக் எழுதத் தொடங்கியிருப்பதும் நல்ல முன்னேற்றம் தான்... (உங்கள் எந்தப் பதிவையும் நான் படிக்கவில்லை.படிக்கப் போவதுமில்லை. (எனக்கு வேற வேலை இல்லையா?) ராம் என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டுத்தான் எழுதுகிறேன்...)
podikkum poothe mootheram muttukirathe!
podikkum kum padikkum rathukey vidhyasam theriyala.. ivar endha aarvathil padithirupaar pola...
neengal nalla nanbarum kuda...
thodarnthu ezhuthungal...
நன்றி பரமேஸ்